

தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், தனக்கு தெரிந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை சிவலிங்கத்துக்கு மேல் இருக்கும் தேள் எனக் கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அதன் ஒருபகுதியாக, டெல்லியை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பப்பார் சார்பில் டெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
சசி தரூரின் ட்விட்டர் பதிவு தனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிதரூருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசி தரூர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.