Published : 25 Nov 2019 04:03 PM
Last Updated : 25 Nov 2019 04:03 PM
உச்ச நீதிமன்றம் ஒன்றின் மீது மட்டுமே எங்களுக்கு இன்னும் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ஆட்சி அமைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை. இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. என்சிபி, சிவசேனா, காங்கிரஸ் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கத் தயாராகின.
ஆனால், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவோடு தேவேந்தி பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராகினார். பெரும்பான்மை இல்லாமல் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடம் தான் முழுமையான பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எங்களால் அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இது தொடர்பான எங்கள் ஒட்டுமொத்த அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் ஒன்றின் மீது மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை இன்னும் மிச்சமிருக்கிறது
எந்தவிதமான பெரும்பான்மை இல்லாமல் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஆளுநரை இன்று சந்திக்க உள்ளார்கள். என்சிபி கட்சியின் 4 எம்எல்ஏக்களை பாஜக அல்லது ஹரியாணா போலீஸார் பிடித்து வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த அளவுக்கும் துணிவார்கள்.
பாஜக தலைவர்களை அதிகாரத்தில் இருந்து துரத்திவிட்டால் அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். மனரீதியாகச் சமநிலையை இழந்துவிடுவார்கள். ஆனால், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.
நாங்கள் ஆட்சி அமைத்தபின், தனியாக சிறப்பு மருத்துவமனை அமைத்து, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பாஜக தலைவர்களுக்கு சிகிச்சை அளிப்போம்.
அஜித் பவாருக்கு 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி தருவதற்கு பாஜக தயாராக இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் இதை விஷயத்தை எங்களுடன் செய்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை. நாங்கள் பெரும்பான்மை பெற்ற பின் பாருங்கள்''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment