Published : 25 Nov 2019 11:25 AM
Last Updated : 25 Nov 2019 11:25 AM

12 கை விரல்கள்; 20 கால் விரல்கள்: சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்ட ஒடிசா மூதாட்டி

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் கைகளில் 12 விரல்களும், கால்களில் 20 விரல்களும் உள்ளன. பிறவியிலேயே இத்தகைய குறைப்பாட்டுடன் பிறந்த அவரை அவ்வூர் மக்கள் சூனியக்காரி என முத்திரை குத்தி வைத்துள்ளனர்.

தனது வேதனை மிகுந்த வாழ்க்கைப் பயணம் குறித்து குமாரி நாயக் (63) என்ற மூதாட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "நான் பிறக்கும்போதே எனது கை, கால்களில் இத்தகைய குறைபாடு ஏற்பட்டிருந்தது. இது பிறவிக் குறைபாடு. ஆனால் இதை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை.

இந்த குறைபாட்டை சரி செய்ய எனக்கு வசதி இல்லை. நான் பிறந்தது மிகுந்த ஏழ்மையான குடும்பம் என்பதால் குறைபாட்டை பொறுத்துக் கொண்டே வாழ, வளர நேர்ந்தது.

இதோ 63 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஊர் மக்களின் நிந்தனைகளுக்கு ஆளாகியபடியே வாழ்வைக் கழித்து வருகிறேன். சிலர் என்னை சூனியக்காரி எனக் கூறி ஒதுக்கும்போது வேதனையாக இருக்கிறது.

மக்களின் ஏளனப் பேச்சுக்களுக்கு அஞ்சியே என் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை நான் வீட்டுக்குள்ளேயே கழித்து விட்டேன்" என்றார்.

ஆனால், அதே ஊரைச் சேர்ந்த சிலர் குமார் நாயக்கின் இந்த நிலையைக் கண்டு பரிதாபப்படவும் செய்கின்றனர். அண்டை வீட்டு நபர் ஒருவர் கூறும்போது குமாரி நாயக்கிற்கு உடல் சவால் இருப்பது எனக்குப் புரிகிறது. அது மருத்துவ ரீதியான சிக்கல் என்பதையும் நான் அறிகிறேன். ஆனால், இது நிறைய பேருக்குப் புரிவதில்லை" என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

இது தொடர்பாக ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பினாகி மொஹாந்தி கூறுகையில், "கை, கால்களில் கூடுதலாக ஓரிரு விரல்களுடன் பிறப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், 20 கால் விரல்கள், 12 கை விரல்கள் கூடுதலாக இருப்பது மிகமிக அரிதான நிகழ்வு. இதனை பாலிடேக்டிலி (Polydactyly) என்போம். இது மரபணு மாற்றங்களால் ஏற்படும் பிறவிக் குறைபாடும். இத்தகைய நிலை 5000-ல் ஒருவருக்கு ஏஎற்படவே வாய்ப்புள்ளது. இத்தகைய நோயாளிகள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக நெருக்கடியையும் சேர்த்தே எதிர்கொள்ளும் அவலம் இங்கு நிலவுகிறது" என்றார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x