Published : 23 Nov 2019 01:20 PM
Last Updated : 23 Nov 2019 01:20 PM

அஜித் பவார் மீது நடவடிக்கை; சிவசேனாவுக்கு தான் ஆதரவு: சரத் பவார் திட்டவட்டம்

அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.


இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்தார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பிற்பகல் 12:30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டியளித்தனர். மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அப்போது அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினர்.

இதுகுறித்து சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்கும் முடிவு தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல. இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அவரின் முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ள அஜித் பவார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் அஜித் பவார் இந்த முடிவு எடுத்தாரா என்பது தெரியாது. அவருக்கு பதில் தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

சிவசேனா தலைமையில் அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் முடிவில் மாற்றமில்லை. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தருவது என்ற எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x