Published : 17 Nov 2019 02:54 PM
Last Updated : 17 Nov 2019 02:54 PM
அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்களுடன் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (18-11-19) அன்று தொடங்குகிறது.
இந்த கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் 20 அமர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் நடக்கும் 2-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார சுணக்க நிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதில் பெற எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதேபோல ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இரு முக்கியமான அவசரச் சட்டங்களைச் சட்டமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.
அதில் முதலாவதாக, பொருளாதார சுணக்க நிலையை மாற்ற, வருமானவரிச் சட்டம் மற்றும் நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த செப்டம்பர் அவசரச்சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.அதன்படி புதிய, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைத்து அறிவித்தது.
இரண்டாவதாக, இ-சிகரெட் விற்பனை, தயாரித்தல், விற்பனைக்காக இருப்புவைத்தல் ஆகியவற்றுக்கு எதிராக அவசரச் சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. இந்த இரு அவசரச்சட்டங்களையும் சட்டமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அந்த கூட்டத் தொடர் மிகவும் ஆக்கப்பூர்வமாக நடந்தது. முக்கியமாக முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகத் தீர்மானம் கொண்டுவந்து இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் குளிர்காலக் கூட்டத்தொடரையும் மிகவும் ஆக்கப்பூர்வமாகக் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது
நாளை தொடங்கும் கூட்டத் தொடரில் குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான அரசு தீவிரம் காட்டும் எனத் தெரிகிறது. அதாவது அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை அளிக்கும் மசோதாவாகும்.
கடந்த முறை ஆட்சியில் இந்த குடியுரிமை மசோதா கொண்டுவரப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மத அடிப்படையில் மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்கிடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தன. கடந்த மக்களவைக் காலம் முடிந்தவுடன் அந்த மசோதாவும் காலாவதியானது.
இந்த மசோதாவின்படி பாகிஸ்தான், வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், ஜெயின்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாகும். ஆனால், இந்த மசோதாவுக்கு அசாமிலும், கிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு வலுத்து போராட்டங்களும் நடந்தன.
டெல்லியில் நேற்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கேட்க உள்ளோம். குறிப்பாகப் பொருளாதாரச் சுணக்கம், விவசாயிகள் பிரச்சினை, வேலையின்மை, ஜம்மு காஷ்மீர் நிலைமை, சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதையொட்டி, வரும் 26-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment