Published : 11 Aug 2019 07:01 PM
Last Updated : 11 Aug 2019 07:01 PM

பென்சன் திட்டத்தில் 2 கோடி விவசாயிகளை வரும் 15-ம் தேதிக்குள் சேர்க்க மத்திய அரசு இலக்கு: திட்டத்தில் சேர்வது எப்படி?

புதுடெல்லி,


மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிசான் மான்தான் யோஜனா' எனும் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தரும் திட்டத்தில் வரும் 15-ம் தேதிக்குள் 2 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது


இந்த திட்டத்தில் சேரும் தகுதியான விவசாயிகளுக்கு 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாகக் கிடைக்கும்.
விவசாயிகள் 60 வயதை அடைந்தவுடன் மாதம் ஒய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தில் விவசாயிகளை இணைக்கும் பொறுப்பை சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் சரவீஸஸ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் நாட்டில் 3.5 லட்சம் பொதுச்சேவை மையங்களை நிர்வகித்து வருகிறது.
இந்த திட்டத்தில் விவசாயிகளை இணைப்பது குறித்து சிஎஸ்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் தியாகி கூறியதாவது:
" நாடுமுழுவதும் கிராம அளவில் பொதுச் சேவை மையங்கள் நடத்தும் தொழில்முனைவோர்கள், குறைந்தபட்சம் 100 விவசாயிகள், குறு விவசாயிகளை வரும் 15-ம் தேதிக்குள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரத்தினத்தன்று நம்முடைய அனைத்து பொதுச்சேவை மையங்களும் திறந்திருக்கும். சுதந்திரத்தினத்துக்குள் 2 கோடி விவசாயிகளை இந்த திட்டத்தில் இணைப்பது இலக்காகும்.

எவ்வாறு இணைவது ?

இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைவது மிகவும் எளிதானது. தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள பொதுச்சேவை மையத்தை அணுகி தங்களின் ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் அல்லது வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்கலாம். இதை பொதுச்சேவை மைய அதிகாரி, ஆன்-லைன் மூலம் விவசாயியின் விவரங்களை பதிவு செய்து கொள்வார்.
அதன்பின் அனைத்து விதமான விசாரணைகள் முடிந்தபின், குறிப்பிட்ட விவசாயிக்கு பென்சன் கார்டும், பென்சன் கணக்கு எண்ணும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் படி 60 வயதை எட்டிய விவசாயிக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும்

யார் தகுதியானவர்கள் ?
2 ஹெக்டர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயி இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள விவசாயிகள் இணைய முடியும். ஒரு விவசாயி குறைந்தபட்சம் ரூ.55 முதல் ரூ.200வரை மாதம் தோறும் பங்களிப்பாக அளிக்கலாம். விவசாயி அளிக்கும் பங்களிப்புக்கு இணையாக மத்திய அரசும் பங்களிப்பு செய்யும்.

மேலும், விவசாயி திட்டத்தில் சேர்வதைப் போல் அவரின் மனைவியும் தனியாக ஓய்வூதியம் பெறத் தகுதியானவர். ஒருவேளை விவசாயி ஓய்வூதிய தேதிக்கு முன்பாக,இறந்துவிட்டால், அந்த திட்டத்தை அவரின் மனைவி தொடரலாம். ஒருவேளை மனைவி அந்த திட்டத்தை தொடர விருப்பம் இல்லாவிட்டால், விவசாயி செலுத்திய ஒட்டுமொத்த தொகை வட்டியுடன் அவரின் மனைவிக்கு வழங்கப்படும் "
இவ்வாறு தியாகி தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x