Published : 07 Aug 2019 04:19 PM
Last Updated : 07 Aug 2019 04:19 PM

மகாராஷ்டிர அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: தண்ணீரில் மிதக்கும் கர்நாடக வட மாவட்டங்கள்

பெலகாவி

கர்நாடகாவின் வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வட கர்நாடக மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் பெலகாவி, பாகல்கோட்டை, யாத்கிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பிக்கொண்டு இருக்கின்றன. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

(கரைபுரண்டு ஓடும் நேத்திராவதி ஆறு)

பெலகாவியில் 300 வீடுகள் இடிந்து விழுந்தன. பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களை மீட்டு வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

(களத்தகிரியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை பேரிடர் மீட்பு குழு மீட்டது)

புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி உட்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த இரண்டு நாட்களுக்கு கர்நாடகாவின் வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

(தார்வார்டில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x