

முஸ்லிம் பெண்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு, அச்சமூக ஆண்களைக் குறிவைப்பது ஏன்?, முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும்போது, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019 மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி,
''இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். இது சரியான திசை நோக்கிச் செல்லவில்லை. ஆணவக் கொலைகளை நிறுத்தும் வகையில் அரசு மசோதா தாக்கல் செய்யவேண்டும். தினந்தோறும் ஆணவக் கொலைகள் நடைபெறுகிறது. அவற்றைத் தடுத்து நிறுத்த என்ன சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்?
கும்பல் வன்முறைக்கு எதிராகவும் நாம் மசோதாவை நிறைவேற்றவேண்டும். இதுதான் இப்போதைய அவசியத் தேவையாக உள்ளது. பெண்கள் ஒதுக்கீடு மசோதாவையும் மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இது அவர்களின் தேர்தல் வாக்குறுதியிலேயே உள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தும் இதுகுறித்துப் பேசவில்லை.
முஸ்லிம் பெண்கள் மசோதா பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது. முத்தலாக் விவகாரம் சிவில் பிரச்சினையாக இருக்கும்போது அதை குற்றவியலாக மாற்றுவது ஏன்?
சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏன் முஸ்லிம் பெண்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்? இந்து, கிறிஸ்தவப் பெண்களின் மீது அக்கறை கொள்ளாதது ஏன்? முஸ்லிம் ஆண்களை மட்டும் குறிவைப்பது ஏன்?
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களே முஸ்லின் பெண்களைப் பாதுகாக்கப் போதுமானவை. முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும்போது, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார் கனிமொழி.
- பிடிஐ