Published : 27 May 2014 06:37 PM
Last Updated : 27 May 2014 06:37 PM
உள்நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளை பாதிக்கும் என்பதால், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிக்கப்போவதில்லை என்று மத்திய தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் பொறுப்பை செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்ட பின்பு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“ஏற்றுமதியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைத்து நாடுகளுடனும் பொருளாதார, வர்த்தக உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மல்டி பிராண்ட் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதற்கு அனுமதி அளித்தால் நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக கூறப்பட்டுள்ளதை செயல்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். இப்போது அமலில் உள்ள கொள்கை குறித்தும் விவாதிக்கவுள்ளோம்” என்றார்.
வாக்குறுதியை பின்பற்றும் பா.ஜ.
பாஜக தேர்தல் அறிக்கையில், மல்டி பிராண்ட் சில்லறை வணிகத்தைத் தவிர, பிற துறைகளில் மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
பின்னர், தொழில் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT