Last Updated : 22 Jan, 2015 10:34 AM

 

Published : 22 Jan 2015 10:34 AM
Last Updated : 22 Jan 2015 10:34 AM

குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும் ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு தயார்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா வருகையை முன்னிட்டு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கிறார். இதற்காக 3 நாள் பயணமாக ஒபாமா வரும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து ஒபாமா வருகையின்போது, வழக்கத்துக்கு மாறாக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறும்போது, ‘‘அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின்போது அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. எந்த இடத்திலும் பிரச்சினை இல்லை’’ என்றார்.

ஒபாமாவுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் ராஜ்பத் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி.க்கள் ஏராளமானோர் ஊர்வலத்தைக் கண்டுகளிக்க உள்ளனர். எனவே அந்த பகுதியில் ரேடார் அமைத்து வான்வெளியைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகள் ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளன. அங்கிருந்து குடியரசு தின விழா முழுவதையும் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒபாமா வருகையால் எல்லையில் அசம்பாவிதங்களை தடுக்க, ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைக் கோடு பகுதியில் கூடுதலாக 1,200 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாஜ்மகால் அருகே 4,000 காவலர்கள்

ஆக்ரா

இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் வரும் 27-ம் தேதி தாஜ்மகாலைப் பார்வையிடவுள்ள னர். எனவே, தாஜ்மகால் சுற்றுப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப் படுகிறது.

சுமார் 100 அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 4,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

பாதுகாப்பு தொடர்பாக, ஆக்ரா முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் மோடக் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக வெளியே தெரிவிக்க இயலாது. காவல்துறையினர், துணை ராணுவத்தினர் என 4,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அமெரிக்க பாதுகாப்புப் படையினரும் இருப்பர்” என்றார்.

வான்வெளி கண்காணிப்புக்காக உ.பி. காவல்துறை ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x