Published : 13 Dec 2014 05:14 PM
Last Updated : 13 Dec 2014 05:14 PM
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து 12 எம்.பி.க்கள் அடங்கிய குழு, இந்திய எம்.பி.க்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி வந்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அவாய்ஸ் கான் லெகாரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என்பது இரு நாட்டுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்க உதவுவதோடு, நமது நட்பு நாடுகளுக்கே நன்மை ஏற்படுவதாக இருக்கும். இந்தியா விரும்பினால் பேச்சு நடத்தலாம்.
ஆனால் இதில் இந்தியா விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை. அவை சார்க் மாநாட்டின்போதே தெரிந்தது. எங்களது பிரதமர் ஷெரீப் 18-வது உச்சி மாநாட்டில் பேசும்போது, மோடி தொடர்பே இல்லாத ஏடு ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதிலிருந்தே நல்லுறவு நடவடிக்கைக்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அதற்காக நவாஸ் ஷெரீஃப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நரேந்திர மோடி தக்க பதில் தரவில்லை. என்றும் இந்தியாவுடன் இணக்கமான உறவில் இருக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது" என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, பாகிஸ்தான் எம்.பி. லெகாரியின் கருத்தை குறிப்பிட்டு, "இந்திய நாட்டின் தலைவரை விமர்சிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை.
இந்தியாவால் எந்த நாடும் அவமதிக்கப்பட்டதாக வரலாற்றிலேயே இல்லை. பயங்கரவாதத்துக்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசு இந்திய அரசை குறைக் கூறக் கூடாது. பாகிஸ்தான் அரசுக்கு அதற்கான எந்த உரிமையும் இல்லை" என்று காட்டமாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT