Published : 10 Dec 2014 12:19 PM
Last Updated : 10 Dec 2014 12:19 PM
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தூக்கு தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரும் யாகூப் மேமன் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு, மகாராஷ்டிர சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார். இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ‘ஆயுள் தண்டனைக்காலம் 14 ஆண்டுகள்தான். நான் 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டேன். எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT