Published : 12 Dec 2014 08:24 AM
Last Updated : 12 Dec 2014 08:24 AM

சொத்துக் குவிப்பு வழக்கு: விரைந்து விசாரிக்க கோரிய ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி

தனது மனு தொடர்பான விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. திட்டமிட்டபடி டிசம்பர் 18-ம் தேதிதான் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் ஜாமீன் கேட்டும் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை ஜெயலலிதா அணுகினார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு, கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அப்போது, மேல்முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 18-ம் தேதிக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லா விட்டால் ஜாமீன் ரத்து செய்யப் படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்திருந்தது. அதோடு, இந்த வழக்கின் விசாரணை, டிசம்பர் 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங் களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் 10 நாட்கள் முன்னதாக கடந்த 8-ம் தேதியே, அளித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன், “ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையை விரைந்து நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டமிட்டபடி டிசம்பர் 18-ம் தேதிதான் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

அப்போது ஆஜரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது, அவருக்கு எதிராக ஆஜராகவுள்ளேன். எனவே, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் என்னிடம் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர், உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “நான் கேட்ட ஆவணங்களைத் தருவதாக பாலி எஸ்.நாரிமன் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x