Published : 12 Dec 2014 08:56 PM
Last Updated : 12 Dec 2014 08:56 PM
எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்கள் தரப்பில் ரூ.4479 கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய மிகப்பெரிய வெளிப்பாடாக எச்.எஸ்.பி.சி. பட்டியலில் ரூ.4,479 கோடிக்கு பணம் இருக்கும் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் 79 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தவிர, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகம் இந்தியாவுக்குள் கணக்கில் வராத ரூ.14,957.95 கோடி கருப்புப் பணம் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கருப்புப் பணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், எச்.எஸ்.பி.சி. ஜெனிவா கிளையில் கணக்கு வைத்திருக்கும் 628 இந்தியர்கள் பற்றிய விவரங்களை இந்திய அரசு, பிரான்ஸ் அரசிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த 628 கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் நிலுவையில் காண்பிக்கப்படவில்லை. இந்தத் தகவல்களை சிறப்பு விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
“628 நபர்களில், 201 பேர் இந்தியாவில் வசிக்காதவர்கள் அல்லது கண்டறியப்பட முடியாதவர்கள். இதனால் 427 கணக்குகள் நடவடிக்கைக்கு உரியன என்று "சிறப்பு விசாரணைக்குழுவின் 2-வது அறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதிகளை” வெளியிட்டு அதிகாரபூர்வ அறிக்கை கூறியுள்ளது.
இந்த நபர்களுடன் தொடர்புடைய கணக்குகளில் வெளியிடப்படாத நிலுவைத் தொகை மீது ரூ.2,926 கோடி வரியும் பொருந்தக்கூடிய வட்டியும் விதிக்கப்பட்டுள்ளது.
1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டப்படி 46 கணக்குகள் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்தகைய அபராதங்கள் 3 கணக்குகள் மீது இதுவரை விதிக்கப்பட்டுள்ளன. என்று இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த அறிக்கை பெயர்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6 நபர்கள் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 10 பேருக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிற நபர்கள் மீது தேவைப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வரும் மாதங்களில் முக்கியமான முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. என்று இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT