Published : 01 Dec 2014 01:11 PM
Last Updated : 01 Dec 2014 01:11 PM
நெல், பருத்தி கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டத்தால் அவை அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
அவை கூடியவுடனேயே, பாஜக தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், நெல், பருத்தி கொள்முதல் விலையை 50% அதிகமாக உயர்த்த வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி உறுப்பினர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் கோஷங்களை எழுப்பினர்.
இதன் காரணமான, பகல் 12 மணிக்கு முன்னதாக இரண்டு முறையும், அதன் பின்னர் 1 மணி நேரமும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக மாநிலங்களவை பூஜ்ய நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அகமது படேல், கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.7000-ஆக இருந்த பருத்தி விலை நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.3000 வீழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கூறும்போது: ஐ.மு.கூட்டணி அரசாட்சியில் காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, விவசாயிகளிடம் சரியான விலை கொடுத்து பருத்தி கொள்முதல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் அத்தகைய உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
தேர்தல் நேரத்தில், மோடி தனது பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் உற்பத்தி விலையைவிட 50% அதிகமாக கொடுத்து நெல், பருத்தி ஆகியன விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என கூறியதாக சுட்டிக்காட்டினார்.
மகாராஷ்டிராவில், 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT