Published : 11 Dec 2014 01:02 PM
Last Updated : 11 Dec 2014 01:02 PM
பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம். மணி மீது லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளத்தில் மது பார்களை மீண்டும் திறக்க நிதியமைச்சர் கே.எம். மணி ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டு, அதில் முதல் தவணையாக ரூ.1 கோடி பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையை அடுத்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அமைச்சர் கே.எம். மணி, பார் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 கோடியை மூன்று தவணைகளில் பெற்றதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட 7 பேரிடமிருந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் பெற்றுள்ளனர்.
கே.எம். மணி மறுப்பு
டெல்லியில் நடக்கும் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற கேரள நிதி அமைச்சர் கே.எம்.மணி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் இவை நிரூபிக்கப்படும். இது தொடர்பாக என்னைத் தவிர மற்ற அமைச்சர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவை எதுக்குமே ஆதாரம் இல்லை" என்றார்.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் உம்மன் சாண்டி, 2023-ம் ஆண்டுக்குள் கேரளத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி அங்கு நூற்றுக்கணக்கான பார்கள் மூடப்பட்டன.
அதில் 418 பார்களை மீண்டும் திறப்பதற்கு கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாகவும், முதல்கட்டமாக ரூ.1 கோடி அவருக்கு கொடுத்ததாகவும் கேரள பார் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பிஜு ரமேஷ் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT