Published : 26 Dec 2014 08:53 AM
Last Updated : 26 Dec 2014 08:53 AM

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிரஞ்சீவி நேரில் ஆறுதல்: 150-வது படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக உறுதி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 10 வயது ரசிகனை முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி நேற்று நேரில் சென்று பார்த்தார்.மேலும் தான் நடிக்க உள்ள 150-வது திரைப்படத்தில் அந்த சிறுவனுக்கு நடிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் சிரஞ்சீவி தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு(10) புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத் எம்எஸ்ஜி புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில் தன்னுடைய அபிமான நடிகரான சிரஞ்சீவியை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளான். இதுகுறித்து தெலுங்கு ஊடங்களில் செய்தி வெளியானது.

இதை அறிந்த சிரஞ்சீவி நேற்று காலை எம்எஸ்ஜி மருத்துவமனைக்கு சென்று சிறுவன் பாலுவை சந்தித்தார். சிரஞ்சீவி நேரில் வந்ததை அறிந்த பாலு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் தான் கொண்டு வந்த பரிசு பொருட்களை அந்த சிறுவனுக்கு கொடுத்து தைரியம் கூறினார் சிரஞ்சீவி.

அப்போது சிரஞ்சீவியுடன் ஆடி, பாட விரும்புவதாக அந்த சிறுவன் கூறியுள்ளான். இதைக் கேட்ட சிரஞ்சீவி, தனது 150-வது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக பாலுவிடம் உறுதி அளித்தார். இதைக் கேட்டு அந்த சிறுவன் பெருமகிழ்ச்சி அடைந்தான்.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு நடிகர் மஹேஷ் பாபு ஆகியோரும் சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது ரசிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x