Published : 07 Dec 2014 06:01 PM
Last Updated : 07 Dec 2014 06:01 PM
காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொதுமக்கள் பகுதியை குறிவைத்து உரி முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து 15-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "காஷ்மீரின் பாரமுல்லா - உரி இடையிலான சாலையின் இருபுறமும் இப்போது மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
3-ம் கட்ட தேர்தலுக்கு முன்பு இந்தப் குதியில் உள்ள பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி, அச்சம் ஏற்படுத்துவதுதான் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதனால் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிப்பதை தடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க முயன்றதால், உரி அருகே உள்ள மோரா ராணுவ முகாம் மீது தாக்குதல் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
அதேவேளையில், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்த ராணுவம் தவறிவிட்டது என்று கூறுவதில் உண்மை இல்லை.
ராணுவம் தரப்பில் சரியான நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் தீவிரவாதிகள் எளிதாக மக்கள் புழங்கும் பகுதிகளை தாக்கி இருப்பார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள், வெறும் 60 மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் உடனடியாக 6 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 13 பாதுகாப்புப் படையினர் தங்களது உயிரைக் கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். அவர்களால்தான் பொதுமக்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது" என்று அவர் சுப்ரதா சாஹா கூறினார்.
மேலும், அந்தத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு உறுதுணையாக இருந்துள்ளது என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT