Published : 20 Dec 2014 08:41 AM
Last Updated : 20 Dec 2014 08:41 AM
பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம் சென்னையை சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இதற்காக 45 நிமிடத்தில் பெங்களூரில் இருந்து இதயம் சென்னை கொண்டு வரப்பட்டது.இதுபோன்று ஒரு குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்னொரு குழந்தைக்கு பொருத்தப் படுவது நாட்டிலேயே இது முதல் முறை.
சென்னை அடையாறு போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று, இதயம் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தது. இம்மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று திட்ட அலுவலகத்தில் இதயம் தேவை என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் தம்பதியின் 1 ஆண்டு 10 மாதம் ஆன ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்தது. படுகாயம் அடைந்த குழந்தை அங்குள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் கடந்த வியாழக் கிழமை அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்தது. எனவே, குழந்தையின் பெற்றோர் உறுப்புதானம் செய்வதாக மருத்து வமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை மருத்துவமனைக்கு தென் மண்டல உடலுறுப்பு மாற்று ஒருங் கிணைப்பு குழு மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து 1 வயது 10 மாதமான பெங்களூரு குழந்தையின் இதயத்தை சென்னையில் உள்ள இரண்டரை வயது குழந்தைக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. எனவே இரு மருத்துவமனை மருத்துவர் களிடமும், போக்குவரத்து போலீஸாரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை மருத்துவமனையில் இருந்து இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நேற்று அதிகாலை பெங்களூரு விரைந்தது.
பெங்களூரு எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயத்தை எடுத்தனர். அதனை இதய மாற்று அறுவை சிகிச்சைக் கான திரவம் நிறைந்த குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்து பெங்களூரு பழைய விமான நிலையம் 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே இதயத்தை எடுத்துச் செல்லும் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க போக்குவரத்து போலீஸார் மூலம் செய்யப்பட்ட முன்னேற்பாடுகளின்படி, இதயம் விமான நிலையத்துக்கு விரைவாக எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து தனி விமானம் மூலமாக இதயம் சென்னை விமான நிலையத்திற்கு பகல் 2 மணி அளவில் வந்தடைந்தது. ஆம்புலன்ஸ் மூலம் அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 2.10 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றது. அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் சுமார் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இரண்டரை வயது குழந்தைக்கு பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர்.
இதுகுறித்து போர்ட்டிஸ் மலர் மருத்துவ மனையின் இயக்குநர் அரிஷ் மணியன் கூறும்போது, ‘‘பாதுகாப்பாக கொண்டுவரப் பட்ட இதயத்தை குழந்தைக்கு பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்றது. இரண்டரை வயது குழந்தைக்கு உடலுறுப்பு தானம் மூலம் கிடைத்த இதயத்தை பொருத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை’ என்றார். குழந்தையின் இதய துடிப்பு சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
45 நிமிடம்
பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம் அங்குள்ள மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மொத்தம் 45 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் 11 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்லீரல் தானம்
மூளைச் சாவு அடைந்த குழந்தையின் கல்லீரல், மைசூருவைச் சேர்ந்த கல்லீரல் தேவைப்பட்ட 2வயது குழந்தைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இதே போல கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் இதயம் சென்னையை சேர்ந்த 60 வயதானவருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT