Published : 24 Dec 2014 10:38 AM
Last Updated : 24 Dec 2014 10:38 AM

மதமாற்றப் பிரச்சினையை விவாதிக்கக்கோரி கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு: பிரதமர் பதில் அளிக்குமாறு கூறி கடும் அமளி

மதமாற்றப் பிரச்சனையில் பிரதமர் பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மதமாற்றப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அளித்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸுக்கு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அனுமதி மறுத்து விட்டார். இதனால் மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பாக நின்று முழக்கமிட்டனர். அப்போது அவையில் இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இதில் கலந்துகொள்ளவில்லை.

மதமாற்ற விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், டெல்லியில் தாங்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் போலீஸாரின் அராஜகம் குறித்து விவாதிக்கவேண்டும் என முழங்கினர். இதனால் தொடர்ந்து நிலவிய அமளியால் நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மகாஜன் அறிவித்தார்.

மக்களவை மீண்டும் கூடியதும், பிரதமரும் அவையில் இருந்ததை கருத்தில்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதமாற்ற விவகாரத்தில் அவர் பதில் அளிக்கவேண்டும் என வலியுறுத்த முயன்றார். இதற்கும் அனுமதி மறுத்த சபாநாயகர், “நான் யாரையும் இப்போது பேச அனுமதிக்க முடியாது. இதில் பிரதமருக்கும் அனுமதி இல்லை” என்று கூறியவர் கார்கேவிடம், “நீங்கள் நல்ல விஷயங்களை பேசுவதில்லை” என்று சிரித்தபடி கூறினார்.

இதற்கு கார்கே, “நான் நல்ல விஷயத்தையே பேச விரும்பு கிறேன். தன் மனதில் உள்ளதை ரேடியோவில் தெரிவிக்கும் பிரதமர் அதை அவையில் தெரிவிக்கலாம்” என்றார். எனினும் அனுமதி அளிக்க சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

மாநிலங்களவையில்..

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரம் தொடங்கியதும் சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசும்போது, “நேற்று ஜனதா கட்சிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்திய தர்ணாவில் கலந்து கொண்ட தொண்டர்கள் மீது டெல்லி போலீஸ் தடியடி நடத்தியது. அதில் கலந்து கொள்ள வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு அரசு செய்த பலப்பிரயோகத்திற்கு பதில் அளிக்க வேண்டும். இதற்காக, அரசு இந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இதை அகர்வால் அனுமதி இன்றி எழுப்புவதாகவும், கடைசி நாளில் அவையைத் தடை இன்றி நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கேட்டுக் கொண்டார். அதன் பிறகும் அமளி தொடர்ந்தது. ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சரத் யாதவ் பேசும்போது, “இதுபோல் மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தம்மை எதிர்த்து நடக்கும் போராட் டங்களுக்கு பாதுகாப்பு அளித்து ஒழுங்குபடுத்துவது அரசின் கடமை” என்றார்.

தொடர்ந்து அவையின் நடுப்பகுதிக்கு வந்த சமாஜ்வாதி மற்றும் ஐக்கிய ஜனதா எம்.பி.க்கள் ‘பிரதமர் பதில் அளிக்க வேண்டும்’, ’மத்திய அரசின் சர்வாதிகாரம் இங்கு செல்லாது’ எனத் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால், மதியம் 12.00 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக துணைத்தலைவர் குரியன் அறிவித்தார். பிறகு கூடிய அவையில் மீண்டும் கிளம்பிய அமளியால் இரண்டாவது முறையாக மதியம் 1.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x