Published : 01 Dec 2014 02:49 PM
Last Updated : 01 Dec 2014 02:49 PM

மீனவர் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் திமுக, அதிமுக வலியுறுத்தல்

மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) மீனவர் பிரச்சினையை எழுப்பி திமுக, அதிமுக எம்.பி.க்கள், மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் கோரினர்.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்க மோடி அரசு தக்க நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை, அவர்கள் விடுதலைக்கு உதவியது. அதேவேளையில் அண்மையில் கைது செய்ய தமிழக மீனவர்கள் உள்பட 28 மீனவர்களையும், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 78 படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "இலங்கை அதிபரிடம் தான் வலியுறுத்தியதன் காரணமாகவே மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படை சிறை பிடித்து வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அவரது கருத்தை பாஜக நிராகரிக்கவில்லை. இத்தகைய பொறுப்பற்ற கருத்துகளை கட்சியினர் வெளியிடுவதை அரசு தடுக்க வேண்டும்" என்றார்.

அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் பேசும்போது, "தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது கல் வீசி இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் இலங்கைக் கடற்படை ஈடுபடுவதை தடுக்கவும் மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்க ஏதுவாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x