Published : 16 Dec 2014 12:45 PM
Last Updated : 16 Dec 2014 12:45 PM
கட்டாய மதமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'மதத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்' என கோஷமிட்டனர்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் 2-வது நாளாக இன்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கியது.
தமிழக எம்.பி.க்களை தவிர அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவை நடுவே குழுமி கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், அவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, "டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று நல்லாட்சி தின கொண்டாட்டத்திற்காக பள்ளிகளை இயங்குமாறு தெரிவிக்கவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது, ஆனால் அன்றைய தினம் பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்துமாறு உத்தரவிட்டு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை என்னிடம் உள்ளது. அதை அவையில் தாக்கல் செய்ய விரும்புகிறேன்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "கட்டாய மதமாற்ற விவகாரம் குறித்து அவையில் ஆலோசிக்க அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் ஏனோ அதனை ஏற்கத் தயாராக இல்லை" என்றார்.
தொடர்ந்து அவையில் கூச்சல் நிலவியது. 'மதத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்' என உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அவை துணைத் தலைவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT