Last Updated : 05 Dec, 2014 11:06 AM

 

Published : 05 Dec 2014 11:06 AM
Last Updated : 05 Dec 2014 11:06 AM

பாலியல் பலாத்கார வழக்கு: பரிசோதனைக்கு ஆஜராகாமல் சாமியார் தலைமறைவு - கர்நாடக சிஐடி போலீஸார் விசாரணை

பெங்களூருவைச் சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாமியார் ராகவேஷ்வரா பாரதிக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதை அறிந்த ராகவேஷ்வரா, தலைமறைவாகிவிட்டார். அவரை கர்நாடக‌ சிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.

போலீசில் புகார்

கர்நாடகத்தில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ராமசந்திரா மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சாமியார் ராகவேஷ்வரா பாரதி. இவரது பக்தையான பெங்களூருவில் உள்ள பனசங்கரியை சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி தன்னை சாமியார் ராகவேஷ்வரா பாரதி பலாத்காரம் செய்துவிட்டதாக மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.

ராகவேஷ்வரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், ராகவேஷ்வரா வுக்கு ஆண்மை பரிசோதனை செய்து, விசாரணை நடத்த கர்நாடக சிஐடி போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், அதற்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராகவேஷ்வரா மனு தாக்கல் செய்தார்.

இதனை நேற்று முன்தினம் விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேணுகோபால், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனையும் சட்ட விசாரணையின் அங்கமே. அதற்கு தடை விதிக்க முடியாது. ராகவேஷ்வரா பாரதிக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீஸாருக்கு முழு உரிமை இருக்கிறது” என உத்தரவிட்டார்.

ராகவேஷ்வரா தலைமறைவு

இதனைத் தொடர்ந்து ராகவேஷ்வராவுக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆண்மை பரிசோதனை நடத்தப்படும் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்தனர். ஆனால், ராகவேஷ்வரா மருத்துவமனைக்கு வரவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து, கர்நாடகத்தின் ஷிமோகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் சாமியார் ராகவேஷ்வரா பாரதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x