Last Updated : 04 Nov, 2014 02:57 PM

 

Published : 04 Nov 2014 02:57 PM
Last Updated : 04 Nov 2014 02:57 PM

டெல்லி சட்டப்பேரவையை கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பிப்ரவரியில் மறுதேர்தலுக்கு வாய்ப்பு

டெல்லி சட்டப் பேரவையை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அதன்படி அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றது. 70 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் பாஜகவுக்கு 32 இடங்கள், ஆம் ஆத்மிக்கு 28 இடங்கள், காங்கிரஸுக்கு 8 இடங்கள் கிடைத்தன.

பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. திடீர் திருப்பமாக காங்கிரஸின் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனால் லோக் ஆயுக்தா மசோதாவை சட்டப்பேரவையில் நிறை வேற்ற முடியாததால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 49 நாள் ஆட்சிக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்தார். அப்போது சட்டப்பேரவையை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்தக் கூறி கேஜ்ரிவால் அளித்த பரிந்துரையை துணைநிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஜன நாயக நாட்டில் குடியரசுத் தலை வர் ஆட்சியை நீண்ட காலம் நடத்த முடியாது எனக் கூறி, வரும் 11-ம் தேதிக்குள் முடிவு எடுக்க துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து பிப்ரவரி 17 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக ளின் தலைவர்களை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்றுமுன்தினம் அழைத்துப் பேசினார். எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என குடியரசுத் தலை வருக்கு அவர் அறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கை குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. இந்தப் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது. சட்டப்பேரவை கலைக்கப் பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி டெல்லி சட்டப்பேரவைக் கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

3 தொகுதி இடைத்தேர்தல் ரத்து

பாஜக எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மக்களவைத் தேர்த லில் போட்டியிட்டு எம்.பி.க்க ளாகி உள்ளனர். அந்த மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் வரும் 25-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டப்பேரவை கலைக்கப் படுவதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x