Last Updated : 20 Nov, 2014 04:56 PM

 

Published : 20 Nov 2014 04:56 PM
Last Updated : 20 Nov 2014 04:56 PM

முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக, கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு சுமுக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி அழைத்துள்ளார்.

டெல்லியில் இது குறித்து அவர் கூறும்போது, "முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது பற்றிய விவகாரத்தை விவாதிக்க, தமிழகம் மற்றும் கேரள பிரதிநிதிகளை வரும் சனிக்கிழமையன்று புது டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். மத்திய நீராதார ஆணையத்தையும் விவாதத்தில் சேர்க்க முடிவெடுத்துள்ளோம்" என்றார்.

இதற்கிடையே, கேரள மாநிலத்தின் முதன்மை அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “வைகை அணையில் அதன் கொள்ளளவை ஒப்பிடும் போது 37% நீர்மட்டம்தான் இருக்கிறது. ஆகவே, தற்போது 141.8 அடி நீர்மட்டம் உள்ள முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகைக்கு தண்ணீரை தமிழக அரசு திருப்பிவிட்டால் அது நல்ல முடிவாக இருக்கும்” என்றார்.

இந்த ஆண்டு மே மாதம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், அணைக்கு ஆபத்தில்லை என்றும் கூறியது.

ஆனால் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, “முல்லை பெரியாறு அணை அருகே வாழும் மக்களுக்கு அச்சம் உள்ளது. இந்த நெருக்கடியை சுமுகமாகத் தீர்ப்போம் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் எப்போதும் நல்லுறவு இருந்து வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை கேரள அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடிவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x