Last Updated : 07 Nov, 2014 08:38 AM

 

Published : 07 Nov 2014 08:38 AM
Last Updated : 07 Nov 2014 08:38 AM

பாதிக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் பணமில்லை: கருப்பு பண விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு தகவல்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படு கிறது.

இதுகுறித்த விவரங்களை அளிக்கு மாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்து அரசிடம் கோரி வருகின்றன. ஆனால் அந்த நாட்டு அரசு விவரங்களை அளிக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில் 2008-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் விவரங்களை திருடி பிரான்ஸ் அரசிடம் அளித்தார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அந்த விவரங்களை பிரான்ஸ் அரசு மத்திய அரசிடம் அளித்தது.

அப் பட்டியல் கருப்பு பணம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கப் பட்டது.

இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி அந்தப் பட்டியல் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 628 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

மொத்தமுள்ள 628 பேரில் 289 பேரின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை. மேலும் 122 பேரின் பெயர்கள் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே எச்.எஸ்.பி.சி. பட்டியலை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம். மேலும் வங்கிக் கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, பணப் பரிமாற்ற விவரங்கள் குறித்து பட்டியலில் எதுவும் இல்லை.

வருமான வரித் துறை சார்பில் இதுவரை 150 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் சுமார் 300 பேரிடம் வருமான வரித் துறைதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இவை உட்பட அனைத்து விவரங் களையும் சிறப்பு புலனாய்வுக் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் சில பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 78 நாடுகளுடன் மத்திய அரசு இரட்டை வரி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கருப்பு பண விவரங்களை பெற வேண்டும்.

சுமார் 30 வழக்குகள் தொடர்பாக 31 புதிய நாடுகளுடன் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரட்டை வரி ஒப்பந்தத்தை மேற்கொள்ள உடன்பாட்டை எட்டியுள்ளனர். அந்த நாடு களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கருப்பு பணம் குறித்த விசாரணைக்காக அமலாக்கத் துறையில் அறிவு, அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x