Published : 19 Nov 2014 10:27 AM
Last Updated : 19 Nov 2014 10:27 AM

பேரவைத் தலைவரை முற்றுகையிட்டதால் தெலங்கானா சட்டசபையில் 13 காங். எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

தெலங்கானா மாநிலத்தில் கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு போரடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏ-க்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தெலங்கானா சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று காலை பேரவை தொடங்கியதும், காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் தன்னுடைய கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது அரசியலமைப்புக்கு எதிரானது. கட்சி தாவும் எம்எல்ஏ-க்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும், என கோரிக்கை எழுப்பினர்.

இதனால் சபையில் அமளி ஏற்பட்டு இரு முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 3-வது முறையும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இதே பிரச்சினையை முன்னிறுத்தி விவாதம் கோரியதால், பேரவையில் இருந்த அமைச்சர் ஹரீஷ் ராவ் ‘அமளியில் ஈடுபடும் 13 காங்கிரஸ் உறுப்பினர்களை ஒரு நாள் இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என சபாநாயகர் மதுசூதனாச்சாரிக்கு கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து 13 காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவைப் பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 13 பேரும் சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மீது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அதில், இந்திய அரசியல் சட்டத்தை மீறும் சந்திர சேகர் ராவை முதல்வர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x