Published : 27 Nov 2014 10:07 AM
Last Updated : 27 Nov 2014 10:07 AM
தெலங்கானா மாநிலத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ. 241 கோடி வழங்க வேண்டும் என மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தெலங்கானா சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தின்போது, இந்துசமய அறநிலைத் துறை பராமரிப்பு குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நீர்வளத் துறை அமைச்சரும், பேரவை விவகார அமைச்சருமான ஹரீஷ் ராவ் அளித்த பதில் வருமாறு:
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. மாநிலப் பிரிவினை சட்டத்தில் கூறியிருப்பது போல, ஒருங்கினைந்த ஆந்திராவில் இருந்த இந்துசமய அறநிலையத் துறை சார்பில், தெலங்கானாவுக்கு பங்குத்தொகை வர வேண்டி உள்ளது. இதன்படி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெலங்கானா அரசுக்கு ரூ. 241 கோடி வழங்க வேண்டி உள்ளது. இதைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இப்போதைய பட்ஜெட்டில் கோயில் வளர்ச்சிப் பணிகளுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பட்ஜெட்டில் அனைத்து கோயில்களிலும் தீப, தூப, நைவேத்தியத்துக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஹரீஷ் ராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT