Published : 16 Nov 2014 08:23 AM
Last Updated : 16 Nov 2014 08:23 AM

ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள்: முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா குற்றச்சாட்டு

சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடிய என்னை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும், வழக்கி லிருந்து விலகுமாறு பாஜக அழுத்தம் கொடுத்தது என்றும் பி.வி. ஆச்சார்யா தனது சுயசரிதை புத்தகத்தில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த பி.வி.ஆச்சார்யா (82), சுமார் 60 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வ‌ருகிறார். நேர்மையும், கண்டிப்பும் மிக்கவர் என வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படும் ஆச்சார்யா, 5 முறை கர்நாடக மாநில தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ள இவர், கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி னார்.

மூத்த வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா "All from memory" என்ற பெயரில் தன‌து சுயசரிதையை எழுதியுள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா புத்தகத்தை வெளியிட, மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் பெற்றுக்கொண்டார்.

வாய்தாவுக்கே தனி நூல் எழுதலாம்

இந்த சுயசரிதையில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து சுமார் 14 பக்கங்களும், 30-க்கும் மேற் பட்ட பின் இணைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் எழுதி இருக்கும் தகவல்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய வழக்கறிஞர் வாழ்க்கையில் சந்தித்த பரபரப்பான வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் எனக்கு வழங்கிய பணியை நேர்மையுடன் செய்தேன். வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு பலமுறை வாய்தா வாங்கியுள்ளது. வாய்தா வாங்கப் பட்ட விதத்தையும், இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்ட விதத்தையும் பற்றி தனி நூலே எழுதலாம். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி வாய்தா வாங்கினார்கள். அது பற்றிய நூலுக்கு 'வாய்தா சட்டம்' என பெயர் சூட்டலாம். ஆனால் அந்த நூலை படித்து எதிர்காலத்தில் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

ஜெயலலிதா ஆதரவாளர்களின் மிரட்டல்

அதேபோல இந்த வழக்கில் நான் நேர்மையாக செயல்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் என்னை தொலைபேசியில் பல முறை மிரட்டினர். சில முறை நேரிலும் மிரட்டினர். மேலும் இவ்வழக்கிலிருந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்தது. இதனால் அப்போதைய கர்நாடகா பாஜக அரசும் எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

இதுமட்டுமல்லாமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் என் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தார்கள். லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அதே நேரத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய் என நீதிமன்றம் சொல்லும் வரை அமைதி காத்தேன்.

எனது நேர்மைக்கு கிடைத்த பலனாக, என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. அதன் பிறகு வெவ்வேறு வழிகளில் எனக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறிய அழுத்தத்தின் காரணமாக ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து ராஜினாமா செய்தேன்.

லஞ்ச ஒழிப்புத் துறை மோசம்

சொத்துக் குவிப்பு வழக்கு நடந்துக்கொண்டிருந்தபோது ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார். அதனால் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். அவர்கள் அச்சத்தின் காரணமாகவே அவ்வாறு பல்டி அடித்தனர்.

அதேபோல வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அணுகுமுறையிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் முறையாக வழக்கை நடத்த தவறினார்கள். மொத்தத்தில் ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து பல அனுபவங்களை பெற்றுக்கொண்டேன். இவ்வாறு ஆச்சார்யா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x