Published : 12 Nov 2014 01:09 PM
Last Updated : 12 Nov 2014 01:09 PM
காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் மணலைச் சுமந்துகொண்டு பெங்களூரு நகருக்குள் தினசரி சுமார் 3,000 லாரிகள் வந்தவண்ணம் உள்ளன.
பெங்களூரு, மைசூர் நகரங்களில் கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் தீராத பசிக்கு காவிரி ஆற்று மணல் கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும் கட்டுமான நிறுவனங்கள் அடங்கிவிடவில்லை.
இது குறித்து இந்திய விஞ்ஞானக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் டி.வி.ராமச்சந்திரா கூறும்போது, "நீர்வாழ் உயிரினங்கள் அழிவது மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் அளவும் கடுமையாக குறைந்து போகும் அபாயம் உள்ளது" என்றார்.
பெரிய அளவில் மணல் எடுப்பதால் ஆற்றுப்படுகையில் ஏற்படும் மாற்றங்களினால் நதியின் போக்கே மாறிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சட்டவிரோத, கொள்ளை லாப வேட்டை வியாபாரம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகளும் தெரிவித்தனர்.
முதல்வர் சித்தராமையாவின் வருணா சட்டப்பேரவை தொகுதி இருக்கும் சுட்டூர் வழியாக ஓடும் காவேரி கிளை நதியான கபில ஆற்றில் சமீபத்தில் போலீசார் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 40 இரும்புப் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இங்கு மரலு கூலி கர்மிக சங்கத்தைச் சேர்ந்த சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதற்காகவென்றே படகுகளை வடிவமைப்பதற்கு பெரிய தொகைகளை செலவிடுகின்றனர். இடைத்தரகர்களுக்கு இந்த கொள்ளை மணல் விற்கப்பட்டு அவர்கள் மூலம் பெங்களூரு, மைசூருக்குச் செல்கிறது. கட்டுமான நிறுவனங்களின் திருப்தி செய்ய முடியாத மணல் தேவையினால் அங்கு சில மாதங்களுக்கு முன் ஒரு டிரக் மணல் ரூ.10,000 ஆக இருந்தது. தற்போது ரூ.35,000 அல்லது ரூ.40,000 என்ற வானுயர விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT