Last Updated : 27 Nov, 2014 10:46 AM

 

Published : 27 Nov 2014 10:46 AM
Last Updated : 27 Nov 2014 10:46 AM

குஜராத் கலவர வழக்கு: விசாரணைக் கைதிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த குல்பர்கா சொஸைட்டி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடந்தது. அப்போது குல்பர்கா சொஸைட்டி படுகொலை நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 67 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள சந்தீப் எனும் சோனு ராம்பிரகாஷ் மெஹ்ரா மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தான் ஏற்கெனவே 12 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இவர் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, மதன் பி.லோகூர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வின் முன் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும், இந்த வழக்கை இன்னும் மூன்று மாதத்துக்குள் முடிக்குமாறு அகமதாபாத் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும், தன்னுடைய அனுமதி இல்லாமல் தீர்ப்பளிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ராகவன் கூறும் போது, மூன்று மாதத்துக்குள் வழக்கை முடிப்பது கடினம் என்றார். இந்தக் குழு குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று சான்றளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x