Published : 07 Nov 2014 10:11 AM
Last Updated : 07 Nov 2014 10:11 AM

69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பல்வேறு பிரிவினர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 1993 நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இதை எதிர்த்து கே.சாஹித்யா மற்றும் எல்.கணபதிநாராயணன் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சிவபாலமுருகன், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்விடம் இந்த மனுவை நேற்று வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதை மீறி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட்டிருந்தால் அதிக மதிப்பெண் எடுத்திருந்த இந்த 2 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். இடம் கிடைக்காததால் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இது அவர்களின் அடிப்படை கல்வி உரிமையை மீறும் செயல் ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மனுவை வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். அத்துடன் இந்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x