Published : 10 Nov 2014 12:31 PM
Last Updated : 10 Nov 2014 12:31 PM

காஷ்மீர், ஜார்க்கண்ட் தேர்தல் பாதுகாப்பு பணியில் 51 ஆயிரம் பேர்

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் 25 ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவுகளின்படி இதுவரை பல்வேறு படைப் பிரிவுகளின் 381 கம்பெனிகள் தேர்தல் பணிக்காக ஜம்மு காஷ்மீர் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ் (ஐடிபிபி), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) ஆகியவை இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோல் 136 கம்பெனி படைகள் ஜார்க்கண்ட் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு கம்பெனி என்பது 100 வீரர்களை கொண்டது. இதன்படி 2 மாநிலங்களிலும் புதிய வீரர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 700 ஆக உள்ளது.

இந்த வீரர்கள் இரு மாநிலங்களிலும் ஏற்கெனவே இருக்கும் மத்திய மற்றும் மாநிலப் படைகளுடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x