Published : 21 Nov 2014 07:36 PM
Last Updated : 21 Nov 2014 07:36 PM
"புத்தரும் காந்தியும் வாழ்ந்த மண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, அதனை எறிந்துவிட்டு நாட்டை மேம்படுத்த முன்வர வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
ஜார்கண்டில் நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்த லத்தீகர் மாவட்டத்தின் சந்துவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, "நமது நாட்டின் மீது கறை படிந்துவிடாமல் பாதுகாப்பது நமது கடமை. மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை போற்ற வேண்டியது அவசியம்.
ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை. அதனால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. வளர்ச்சிதான் அனைவருக்கும் முக்கியம். ஆயுதம் ஏந்தும் நக்சல்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்... உங்களது ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு நாட்டின் வளர்ச்சியில் பங்காற்ற வாருங்கள். கவுதம புத்தரும் மகாத்மா காந்தியும் வாழ்ந்த மண்ணில் ஆயுதங்கள் ஏற்படுத்தும் கறை வேண்டாம்.
நான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், எனது நினைவு முழுவதும் உங்கள் மீதே இருந்தது. விவசாயிகளின் முன்னேற்றம் நாட்டின் அவசியமாக உள்ளது. எனது ஜப்பான் பயணத்தின்போது நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை சந்தித்து விவசாயத்துக்கும் பாமர மக்களின் சுகாதார வசதிகளுக்கான வழிகள் குறித்தும் பேசினேன்.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறச் செய்த ஜார்கண்ட் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதேபோல இந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT