Published : 22 Nov 2014 10:20 AM
Last Updated : 22 Nov 2014 10:20 AM

பெங்களூருவில் முத்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றத்தை நாட முடிவு

கடந்த மாதம் கேரளாவில் தனியார் உணவு விடுதியில் முத்தமிட்ட காதலர்கள் மீது இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இதனைக் கண்டித்து கடந்த 2-ம் தேதி கொச்சியில் 'அன்பின் முத்தம்' என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் போராட்டம் பரவியது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள எம்.ஜி.சாலையில் இன்று முத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாஜக தேசிய துணைத்தலைவர் எடியூரப்பா, “கர்நாடக அரசு முத்தப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது. பெங்களூருவில் அந்த போராட்டத்தை நடத்தவிட மாட்டோம்'' என கடுமையாக எதிர்த்தார்.

சிவசேனா, ஸ்ரீராம சேனா உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும் ஜெய் கர்நாடகா, கன்னடா ரக்ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மற்றும் சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் முத்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முத்தப் போராட்டத்திற்கு பெங்களூரு மாநகர போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த போராட்டம் நடைபெற்றால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியுள்ளார்.

முத்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான‌ ரெய்சிடா தனஞ்சே,'தி இந்து'விடம் கூறும்போது, “எங்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x