Last Updated : 18 Nov, 2014 10:51 AM

 

Published : 18 Nov 2014 10:51 AM
Last Updated : 18 Nov 2014 10:51 AM

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி சாமியார்கள் உண்ணாவிரதம்

கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி 300-க்கும் மேற் பட்ட இந்து மத சாமியார்கள் பெங்களூருவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த போவதாக அம்மாநில‌ அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதனைக் கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, ராம‌ சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. எனவே, அந்த சட்டத்தை கர்நாடக அரசு கிடப்பில் போட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இந்து மத சாமியார்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெங்களூருவில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள‌னர்.

சமூகநீதிக்கான போராட்டம்

இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து நீடிமாமுடி சென்னமலா மடாதிபதி வீரபத்ரா சுவாமி பேசியதாவது:

நம் நாட்டில் நடக்கும் சரிபாதி குற்றச்செயல்களுக்கு ஏதோ ஒரு வகையில் மதம் காரணமாக இருக்கிறது. எதற்காக மதங்கள் ஏற் படுத்தப்பட்டனவோ, அந்த அறநெறி யில் இருந்து விலகி மத குருமார்கள் பயணித்து கொண்டிருக்கின்றனர். இதுவே மதத்தின் பெயரால் நடக்கும் அத்தனை பாவங்களும் முக்கிய காரணம்.

மதத்தின் பெயரால் நடக்கின்ற மூடநம்பிக்கைகள், மிருகத்தனமான சடங்குகள் அப்பாவிகளையும் ஏழைகளையும் குறிப்பாக தலித்துகளை அதிக அளவில் வதைக்கின்றன. கோயில்களில் நடைபெறும் மூடநம்பிக்கை சடங்குகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானவை.

சமீபகாலமாக கர்நாடகத்தில் மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மடங்களில் தொடரும் குற்றங்களால் மக்கள் இந்து மதத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது அவசியம்.

மூடநம்பிக்கை தொடர்ந்து பேணப் படுவதற்கு சாமியார்களிடையே நிலவும் சுய‌நலமும் பண வெறியும் காம உணர்வும்தான் காரணம். தங்களது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள பக்தர்கள் மீது மூடநம்பிக்கை விஷத்தை ஊற்றுகின்றனர். பல இடங்களில் குற்றவாளிகள் சாமியார்களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

எளிமையும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டிய மடங்கள் இன்று ஆடம்பர கூடமாக இருக்கின்றன.கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆன்மிகத்தை போதிக்கின்றனர். இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள்தான் மூடநம்பிக்கை அழியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். மேலும் மூடநம்பிக்கையை வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் வளர்த்துக் கொண்டிருப்பதும் அவர்கள்தான்.எனவே கர்நாடகத்தில் உடனடியாக மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.அப்போது தான் இந்து மதமும் இந்திய மக்களும் செழிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த 3 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு பல்வேறு தலித் அமைப்புகளும் முற்போக்கு இயக்கங்களும், கன்னட எழுத்தாளர் மரளுசித்தப்பா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x