Published : 10 Nov 2014 04:04 PM
Last Updated : 10 Nov 2014 04:04 PM

சிவசேனா உடனான சிக்கல் தானாகவே தீர்ந்துவிடும்: ஜேட்லி

சில பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும் என சிவசேனாவுடன் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சராக உள்ள அருண் ஜேட்லி இன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள், பாஜக - சிவசேனா உறவு சிக்கல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜேட்லி, "சில பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும். சிவசேனாவுடனான சிக்கலும் அப்படித்தான். தானாகவே சரியாகிவிடும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் அச்சு ஊடகங்கள் அதிக அளவில் இருந்தன. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது காட்சி ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் ஆகியன பெருகி வருகின்றன. தகவல் ஊடகங்களின் இந்த மாற்றம் கவனிக்கப்பட வேண்டியது" என்றார்.

பாஜக-சிவசேனா மோதல் முற்றுகிறது:

சிவசேனா சார்பில் மத்திய அமைச்சரவைக்கு அனில் தேசாய் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிவசேனா கேட்ட அமைச்சரவையை அவருக்கு ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. டெல்லியில் தங்கியிருந்த அனில் தேசாயை உடனடியாக மும்பை திரும்பும்படி சிவசேனா தலைமை உத்தரவிட்டது.

சிவசேனா மூத்த தலைவர் சுரேஷ் பிரபு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தவர் என்பதால் அவரது பெயரை சிவசேனா பரிந்துரைக்கவில்லை. ஆனால் அவர் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை பதவியேற்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவர் பாஜகவில் இணைந்தார். அவர் பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இருகட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x