Published : 23 Nov 2014 11:17 AM
Last Updated : 23 Nov 2014 11:17 AM
உத்தரப் பிரதேசத்தில் சுங்கவரி வசூல் மைய ஊழியர் மீது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் கள் தாக்குதல் நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோசைன்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. அபய் சிங். இவர், தனது ஆதரவாளர்களுடன் லக்னோ நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது அகமதுபூர் அருகே நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் மையத்தில், கார்களுக்கான பாதை வழியாக செல்லாமல், வேறொரு வழித்தடத்தில் சென்றார். அதை சுங்கவரி வசூல் மைய ஊழியர் சுட்டிக்காட்டினார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அபய் சிங் முன்னிலையில் அவரின் ஆதரவாளர்கள், சுங்க வரி மைய ஊழியர்களை கம்பால் கடுமையாக தாக்கினர். இது குறித்து கேள்விப்பட்ட அபய் சிங்கின் ஆதரவாளர்கள், மேலும் 3 வாகனங்களில் அப்பகுதிக்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து சுங்கவரி வசூல் மைய ஊழியர் ஒருவர் கூறும்போது, “எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்கியதில், எங்கள் ஊழியர் ஒருவரும், காவலாளி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்றார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுங்கவரி வசூல் மைய ஊழியர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம், லக்னோ – பைஸாபாத் தேசிய நெடுஞ்சாலையில் ரவுனாகி அருகே உள்ள சுங்கவரி வசூல் மைய ஊழியரிடம் பணம் கொடுக்க மறுத்து சமாஜ்வாதி மூத்த தலைவர் சுரேஷ் யாதவும், அவரின் ஆதரவாளர்களும் தகராறில் ஈடுபட்டனர்.
2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தானே – பிவாண்டி நெடுஞ்சாலையில் கசேலி அருகே உள்ள சுங்கவரி வசூல் மைய ஊழியருடன் சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அப்துல் ரஷீத் தகராறில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT