Published : 17 Nov 2014 11:06 AM
Last Updated : 17 Nov 2014 11:06 AM
கேரளம் அண்மைக்காலமாக கிஸ் ஆஃப் லவ் (முத்தப் போராட்டம்), ஹக் ஆஃப் லவ் ( கட்டிபிடிக்கும் போராட்டம்) என்ற சில சர்ச்சையை ஏற்படுத்திய செய்திகளின் களமாக இருந்தது.
தற்போது அங்கு 'டச் ஆஃப் லவ்' என்ற வித்தியாசமானப் பிரச்சாரம் ஒன்று நடைபெற்றுவருகிறது. கொச்சி நகரில் மெரைன் டிரைவ் பகுதியில் இந்த பிரச்சாரம் நடந்தது. இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் வயதானவர்களுக்கு அன்பும், அனுசரணையும் தேவை என்பதை சமூகத்துக்கு உணர்த்துவதே ஆகும்.
கொச்சி மாநகராட்சி கவுன்சில் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மனித நல ஆர்வலர்கள், சில அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து இந்த பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
கொச்சி நகரைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான மூத்த குடிமக்கள் பலரும் குழந்தைகளால் அல்லது நெருங்கிய உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் வாழ்பவர்களாவர்.
முதியோர்களுக்கு அன்பும், பாதுகாப்பான வசிப்பிடமும் அவசியம். கடைசி நாட்களில் அவர்கள் உறவுகளோடு இருத்தல் அவசியம். அவர்களை பிள்ளைகளோ அல்லது மற்ற உறவினர்களோ புறக்கணித்து முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவது மிகவும் தவறானது என பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர்களுக்கு பாத பூஜை செய்து சால்வைகளை பரிசளித்தனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT