Last Updated : 21 Nov, 2014 08:51 AM

 

Published : 21 Nov 2014 08:51 AM
Last Updated : 21 Nov 2014 08:51 AM

பாஜகவில் காலியான பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தால் பாஜகவில் காலியான ஐந்து பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் தேசிய நிர்வாகிகளான ஜெகத் பிரகாஷ் நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி, முக்தார் அப்பாஸ் நக்வி, பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ரமாசங்கர் கத்தரியா ஆகிய ஐந்து பேர், சமீபத்தில் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. எனவே இவர்கள் வகிக்கும் கட்சிப் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை அமர்த்துவதுடன், சில மாற்றங்களை செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய வட்டாரம் கூறும் போது, “மோடிக்கு மிகவும் நெருக்க மான வருண் காந்தி ஓம் மாத்தூர், மபி மாநில தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா மற்றும் இளைஞர் அணி தலைவர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் மோடியின் ஒப்புதலுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்” என்றனர்.

ஏற்கெனவே கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த வருண் காந்தி, கடந்த ஆகஸ்டில் அமித் பதவி இழந்தார். உபியின் சுல்தான்பூர் தொகுதி எம்பியான அவருக்கு அம்மாநிலத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து மீண்டும் வாய்ப்பளிக்க உள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேபோல், பீஹாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக அம்மாநிலத்தின் முக்கிய தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சையத் ஷானாவாஸ் உசேனுக் கும் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் ஸ்மிருதி இரானி?

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், டெல்லி மாநில பாஜக தலைவர் டாக்டர் சத்தீஷ் உபாத்யாய், முன்னாள் மாநில தலைவர் விஜய் கோயல் மற்றும் ஜெகதீஷ் முகி ஆகிய நால்வருக்கிடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் உருவாகும் கோஷ்டி பூசலை தவிர்ப்பதற்காக, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், இதன் முதல் கட்டமாக அவரை கட்சியின் நிர்வாகியாக சேர்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x