Published : 12 Nov 2013 12:19 PM
Last Updated : 12 Nov 2013 12:19 PM

குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவது கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

தண்டனைக்குரிய குற்றங்களுக்கான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) போலீசார் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தானாக முன்வந்து நடத்திய வழக்கில் செவ்வாய்கிழமை மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.

இதுநாள் வரை அனைத்து விதமான குற்றங்கள் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு, போலீசார் தங்கள் ’விருப்பங்களுக்கு’ ஏற்ப முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து வந்தனர். இனி, அவர்கள் அப்படி செய்ய முடியாதபடி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இதை செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் காணாமல் போன எட்டு வயது சிறுமிக்காக, தாய் லலிதாகுமாரி என்பவர் ஆட்கொணர்வு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அளித்திருந்தார். இதற்கான புகாரில் உ.பி போலீசார் முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்யாமல் அலைக்கழித்து வந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தானே எடுத்து விசாரித்தது. முதல் தகவல் அறிக்கையைப் பதியாமல் இருந்த உ.பி போலீசாரை கண்டித்த உச்ச நீதிமன்ற அமர்வு, முதல் தகவல் அறிக்கை எதன் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது என அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. கடந்த ஆண்டு இந்த அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரைத்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில் நீதிபதி பி.எஸ்.சௌகான், ரஞ்சன் கோகாய், ஆர்.பி.தேசாய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு கடந்த மே மாதம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. தீர்ப்பில் 8 முக்கிய பரிந்துரைகளை, அரசியல் சாசன அமர்வு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவாக வழங்கியுள்ளது.

தீர்ப்பு விவரம்

தண்டனைக்குரிய குற்றங்களில் முதல்கட்ட விசாரணைக்காக போலீசார் காத்திருக்க வேண்டியதில்லை. முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்து விட வேண்டும்.

எனினும், குடும்பம், திருமணம், மருத்துவம், வணிகம், பொருளா தாரம், ஊழல் தொடர்புடைய வழக்குகளுக்கு விலக்கு உண்டு. இதுபோன்ற வழக்குகளில் அதன் விசாரணையை 7 நாட்களில் முடிக்க வேண்டும். அதில், அடிப்படை ஆதாரம் இருந்தால் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாம்.

புகார்களில் குற்றம்சாட்ட ப்பட்டவர் குற்றவாளிதான் என உறுதி செய்த பிறகே அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x