Published : 12 Aug 2014 12:16 PM
Last Updated : 12 Aug 2014 12:16 PM

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகப் போர்: பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

இந்தியாவுடன் நேருக்கு நேர் மோத பலமில்லாததால் தீவிர வாதம் மூலம் பாகிஸ்தான் மறை முகமாகப் போரிட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் லே மற்றும் கார்கில் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பார்வை யிட்டார். முதலில் லே பகுதிக்குச் சென்ற அவர் பின்னர் கார்கிலுக்கு சென்றார். அங்குள்ள ராணுவ முகாம்களில் வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

ராணுவ வீரர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு போராட்டங் களை எதிர்கொள்கின்றனர். அவர் களை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமை. அதனால்தான் அடிக் கடி ராணுவ வீரர்களைச் சந்தித்து வருகிறேன்.

ஒட்டுமொத்த நாடும் உங்கள் (வீரர்கள்) பின்னால் நிற்கிறது. நாட்டுக்காக வீரமரணமடைந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் விரைவில் தேசிய போர் நினைவுச் சின்னம் கட்டப்படும். கார்கில் ஊடுருவலின்போது தாஷி நாம்கியால் என்ற ஆடுமேய்க்கும் தொழிலாளிதான் ராணுவத்துக்கு முதன்முதலாக தகவல் அளித்தார். இதுபோல் இந்திய ராணுவம் எப் போதும் எல்லையோர கிராம மக்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்க வேண்டும்.

பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு

இந்தியாவுடன் நேருக்கு நேர் போரிடும் பலம் நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) இல்லை. அதனால் அந்த நாடு தீவிரவாதம் மூலம் நம்மோடு மறைமுகமாகப் போரிட்டு வருகிறது.

ராணுவத்துக்கு போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட தீவிர வாதத்தால் அதிக உயிரிழப்புகள் நேரிட்டு வருகின்றன. தீவிரவாதம் என்பது உலகளாவிய பிரச்சினை. அதற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர் தொடுக்க வேண்டும் என்றார்.

லஞ்சம் வாங்க மாட்டேன்

லே மாவட்டத்தில் 45 மெகா வாட் நிமு பாஸ்கோ நீர்மின் நிலைய திட்டத்தையும் கார்கில் மாவட்டத்தில் 44 மெகாவாட் சவுகத் நீர்மின் நிலைய திட்டத் தையும் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டை ஊழல் அரித்துக் கொண்டிருக்கிறது. அதை தடுக்க ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தனது முழு பலத்துடன் போரிடும். ஊழலை நாம் வெற்றி கண்டுவிட்டால் வறுமைக்கு எதிரான போரிலும் நாம் வெற்றி அடைந்துவிடுவோம். நான் லஞ்சம் வாங்கவும் மாட்டேன், யாரும் லஞ்சம் வாங்க அனுமதிக்கவும் மாட்டேன். இது தான் எனது கொள்கை.

காஷ்மீர் பண்டிட்டுகள்

ஒரு காலத்தில் காஷ்மீர் மாநிலத் துக்கு பிரதமர்கள் வருவது கிடையாது. நான் பதவியேற்ற பிறகு 2 முறை காஷ்மீருக்கு வந்துள் ளேன். ஜம்மு-காஷ்மீர் பாஜகவில் நான் கட்சிப் பணியாற்றியுள்ளதால் இந்தப் பிராந்திய மக்களின் பிரச் சினைகளை நன்கறிவேன்.

மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 2 லட்சம் அகதிகள், 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 லட்சம் பேர் என காஷ்மீர் மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத்தைவிட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களை மீண்டும் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். அவர்களும் நமது சகோதர, சகோதரிகள்தான். அவர்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார் மோடி.

இந்த விழாக்களில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x