Published : 23 Sep 2013 06:52 PM
Last Updated : 23 Sep 2013 06:52 PM

போலி என்கவுன்டர் போல மோடி பொய்த் தகவல்: சிதம்பரம் சாடல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், 8.4 சதவீத வளர்ச்சி இருந்தது என்று போலி என்கவுன்டர்களைப் போல பொய்யான தகவலை மோடி கூறியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அளித்துள்ள விளக்கத்தில், “குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, போலி என்கவுன்டர் போலவே, தவறான புள்ளிவிவரங்களுடன் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 8.4 சதவீத அளவுக்கு தேசிய வளர்ச்சி இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இதில் உண்மை இல்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த 1998-99 முதல் 2003-04 வரையிலான 6 ஆண்டுகளில் நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாகும். அதேசமயம் 1999-2000 முதல் 2003-04 வரையிலான 5 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் மட்டுமே.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமும், ஐ.மு.கூ. இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல் 4 ஆண்டுகள் 7.3 சதவீதமுமாக இருந்தது.

நடப்பு நூற்றாண்டின் மிக மோசமான கால கட்டம் என்பது 2000-01 மற்றும் 2002-03 ஆகிய இரு ஆண்டுகளாகும். இந்த இரு ஆண்டுகளில் 4 சதவீத அளவுக்கே வளர்ச்சி இருந்தது.

மோடியின் தகவல் பொய்யானது. உண்மை ஒரு கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பொற்காலம் என்றால், அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலம்தான்” என்று அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x