Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

ஹெலன் புயல் கரையைக் கடந்தது - 2 பேர் பலி; வடஆந்திரம் ஸ்தம்பித்தது

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே ஹெலன் புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது.

புயல் மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். வடஆந்திரம் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான ஹெலன் புயல் காரணமாக வடக்கு ஆந்திரப் பகுதிகளில் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடற்கரை யோரம் வசித்த 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிருஷ்ணா மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

மசூலிப்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமார் 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. அப்போது வடஆந்திரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதில் கிருஷ்ணா மாவட்டம், குருதுவேணு மண்டல் பகுதியில் தென்னை மரம் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகைக் கரையில் நிறுத்த முயன்றபோது கீழே தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.

குண்டூர், கிழக்கு கோதாவரி, பிரகாசம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கடற்கரைகளில் 1.5 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. புயலின்போது விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 20 மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 130க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக போதுமான உணவுப் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஆய்வு

புயல் பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வெள்ளிக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீஸ், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

புயல் காரணமாக ராணுவம், கடற்படை, விமானப் படைத் தளங்களிலும் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அடுத்த 36 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் மீட்புப் படையினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழை

ஹெலன் புயல் காரணமாக தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் கடல் காற்று வீசக் கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஹெலன் புயல் ஆந்திரத்தில் கரையைக் கடந்தபோது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடற்கரைச் சாலை, கிண்டி, அடையார், சேப்பாக்கம், பல்லாவரம், ஊரப்பாக்கம், ராயப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x