Published : 25 Sep 2013 12:40 PM
Last Updated : 25 Sep 2013 12:40 PM

அமெரிக்கா புறப்பட்டார் மன்மோகன்: செப்.27-ல் ஒபாமாவுடன் சந்திப்பு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா புறப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வரும் வெள்ளிக்கிழமை பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்.

அமெரிக்கா புறப்படும் முன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வர்த்தகம், முதலீடு, அணுசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என பல்வேறு நிலைகளில் அமெரிக்கா உடனான உறவு வலுவாகியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், அணுசக்தி ஒப்பந்தம் முதலானவை தொடர்பாக ஒபாமாவுடன் மன்மோகன் சிங் பேசுவார் எனத் தெரிகிறது.

குறிப்பாக, அமெரிக்கா செல்லும் இந்திய ஐ.டி. நிபுணர்களுக்கு யு.எஸ். விசா நடைமுறைகள் மிகக் கடுமையாக உள்ளது தொடர்பாக, ஒபாமாவிடம் அவர் எடுத்துரைப்பார் என நம்பப்படுகிறது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், "உலக அளவில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச அளவில் பொருளாதாரப் பின்னடைவு காணப்படுகிறது. இதன் பின்னணியில், ஐ.நா. பொதுக் கூட்டம் நடக்கிறது.

சர்வதேச நாடுகள் சந்தித்துவரும் சவால்களை, ஐ.நா.வின் பன்முக அணுகுமுறையால்தான் சமாளிக்க முடியும்.

உலக அளவில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் நம்பகமானவையாக இருப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விரைவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனை எனது உரையில் வலியுறுத்துவேன்.

இந்தப் பயணத்தின்போது, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டைநாட்டுத் தலைவர்களுடான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x