Published : 21 Aug 2014 04:56 PM
Last Updated : 21 Aug 2014 04:56 PM

மோடி மேடையில் அவமதிப்பு: சொந்த மாநிலத்தில் ஜார்கண்ட் முதல்வர் பரிதவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அவமரியாதை நேர்ந்தது.

அண்மையில், ஹரியாணாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா பேசத் தொடங்கியபோது, கூட்டத்தில் இருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. பிரதமர் மோடியே பேச வேண்டும் என பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் வலியுறுத்தியதால் சலசலப்பு நிலவியது.

இதை, தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி, இனி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவருடன் மேடை ஏறப்போவதில்லை என பூபேந்தர் சூளுரைத்தார்.

இதேபோல், கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிருதுவிராஜ் சவானும் பங்கேற்றார். பிருதுவிராஜ் சவான் மேடையில் பேசத் துவங்கியதுமே, கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மோடி... மோடி என கோஷம் எழுப்பினர். இதனால், தர்ம சங்கடமான நிலைக்கு ஆளான பிருதுவிராஜ் சவான் பேச்சை பாதியில் நிறுத்தினார்.

இதன் தாக்கத்தால் இன்று நாக்பூரில் நடைபெற்ற மோடி தலைமையிலான மெட்ரோ ரயில் பூமி பூஜை நிகழ்ச்சியை சவான் புறக்கணித்தார்.

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரன். ஜார்கண்டில் இன்று புதிய அனல்மின் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், சோரன் பேசத் தொடங்கியதுமே, கூட்டத்தில் இருந்து மோடி..மோடி.. மோடி கோஷம் எழுந்தது. அவரது பேச்சு முடியும் வரை அந்த கோஷம் நீடித்தது. இதனால் சொந்த மாநிலத்திலேயே முதல்வர் ஹேமந்த் சோரன் பெரும் தவிப்புக்குள்ளானார்.

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில், அங்கு பேசிய பிரதமர் மோடி, ஜார்கண்ட் வளர்ச்சிக்கு மக்கள் பெரும்பான்மை அரசுக்கு வாக்களிக்க வேண்டும். கூட்டணி ஆட்சியால் நெருக்கடி ஏற்படும் என்றெல்லாம் பேசினார். இதுவும் ஹேமந்த் சோரனுக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x