Last Updated : 05 Nov, 2013 08:54 AM

 

Published : 05 Nov 2013 08:54 AM
Last Updated : 05 Nov 2013 08:54 AM

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்குப் பரிந்துரை

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது.



இது தொடர்பான பரிந்துரைக் கடிதம் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பிரதமருக்கு சென்றிருக்கும் கடிதம், மாநாட்டில் அவர் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்ப தாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் நடக்கும் மாநாடு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் பரிந்துரைகள் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் போது பேச வேண்டிய விவகாரங்கள் குறித்தும் அந்த அமைச்சகம் பிரதமருக்கு எடுத்துக் கூறும்.

எனவே, பிரதமருக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்பு முதல்கட்டமாக வெளியுறவுத் துறைக்கே அனுப்பப்படும். குர்ஷித் பேட்டி முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும்' எனக் கூறியிருந்தார்.

வாசன் - சிதம்பரம்...

ஆனால், இதை மறுக்கும் வகையில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் 'மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பிரதமர் இன்னமும் முடிவு எடுக்கவில்லை' எனக் கூறினர்.

மேலும் 2 அமைச்சர்கள் எதிர்ப்பு...

இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி. நாராயணசாமி திங்கள்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இலங்கைக்கு பிரதமர் செல்லக் கூடாது என்ற எண்ணத்தை அவரிடம் கூறி விட்டேன். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்பிக்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றே விரும்புகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் 'மாநாட்டிற்கு செல்ல வேண்டாம்' என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதவிருப்பதாக சென்னையில் கூறியுள்ளார்.

இது பற்றி அவர், 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை, இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பிரதமர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என எண்ணுகிறேன்' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x