Published : 01 Dec 2014 03:24 PM
Last Updated : 01 Dec 2014 03:24 PM

பாகுபாடுகளைக் களைய வடகிழக்கு மக்களுக்காக பழகுதல் திட்டம்: நாகாலாந்தில் மோடி தகவல்

இயற்கை பொருளாதார மண்டலமாக திகழும் நாகாலாந்தை வளமான மற்றும் வலிமையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும், மற்ற மாநில மக்கள் இயல்பாக பழகிப் பாகுபாடுகளைக் களையும் வகையில், விடுமுறை காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 2000 மாணவர்கள் மற்றும் 500 ஆசிரியர்கள், நாட்டின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) நாகாலாந்து சென்றார். நாகாலாந்தின் பாரம்பரிய நாகா இன மக்கள் கொண்டாடும் ஹார்ன்பில் திருவிழாவை பிரதமர் நரேந்திரமோட தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "நமது நாட்டில் ஆங்காங்கே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இயற்கை பொருளாதார மண்டலமாக திகழ்கின்றன. இது இங்கு அமைந்திருக்கும் தனிச் சிறப்பு.

இந்த வளங்களை பயன்படுத்தி நாகாலாந்து மாநிலத்தில் பல இயற்கை பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நாகா மக்கள் தங்களது பாரம்பரியத்துடன் வாழ்கின்றனர். அவர்களது சிறப்பை ஊக்குவித்து, பாதுகாத்து தனித்துவமான கலாச்சாரத்தை போற்ற வேண்டும். இதன் மூலம் நாகாலாந்தை சிறந்த சுற்றுலா தலமாக நம்மால் மாற்ற முடியும். நாகாலாந்தின் இளைஞர்கள் ஆங்கில மொழியை சிறந்த முறையில் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் உலகை அவர்கள் எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய இளைஞர்களின் ஆற்றலை நாம் தட்டிக்கொடுக்க வேண்டும்.

இதற்காக நான் பல திட்டங்களை வகுத்துள்ளேன். வடகிழக்கு பகுதி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநில மக்கள் இயல்பாக பழகும் வகையில், விடுமுறை காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 2000 மாணவர்கள் மற்றும் 500 ஆசிரியர்கள், நாட்டின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைய திட்டமிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் புதிய ரயில் திட்டங்களுக்காக ரூ. 28 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இங்கு இணைய வசதியை மேம்படுத்த ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக எந்த பிரதமரும் இங்கு வரவில்லை. டெல்லியிலிருந்து இங்கு நான் வந்து செல்வதற்கு மொத்தமாக 15 மணி நேரம் தான் ஆகும். எனவே இனி நான் இங்கு அடிக்கடி வந்து உங்களை சந்திப்பேன்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி நாகா மக்களின் ஹார்ன்பில் திருவிழாவில் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அவர் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவுக்கு புறப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x