Published : 15 Mar 2014 04:48 PM
Last Updated : 15 Mar 2014 04:48 PM

தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை: குர்ஷித்

தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் எடுத்து வரும் சில முடிவுகள் ஜனநாயகத்துக்கு சவாலாக உள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் குறித்து தான் விமர்சிக்கவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் குர்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த ஒரு அமைப்பையும் தான் தாக்கி பேசவில்லை என்றும் கல்வி சார் கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்ததாகவும் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை விட, தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பற்றி பேச வேண்டும் என நினைத்தேன், பேசினேன். மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறையில் குறிப்பிடப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கடந்த புதன்கிழமை சல்மான் குர்ஷித் பேசியதாவது:

“தேர்தல் ஆணையத்திடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு வந்த புதிய அறிவுறுத்தல்களில் சாலை அமைத்தல், குடிநீர் விநியோகித்தல் போன்றவை தொடர்பான வாக்குறுதியை தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கூறினால், யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் எடுக்கும் முடிவில் தலையிட்டது போலாகிவிடுமாம்!

சமீப காலமாக தேர்தல் ஆணையம், பரந்த சித்தாந்த ரீதியிலான அணுகு முறையை கடைப்பிடிக்கிறது. நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், பேச வேண் டாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர்கள் உள்ளனர். இவர்கள்தான் நீங்கள் பிரச்சாரத்தின்போது பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளை தீர்மானிக்கின்றனர். மேடைகளில் பேசப்படும் பேச்சுகளில் எந்த அளவுக்கு தேர்தல் ஆணையம் தலையிட முடியும் எனத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்களுக்கு பதில் செல்ல வேண்டிய பொறுப்பு இல்லாத உச்ச நீதிமன்றம், முக்கியமான ஜனநாயக முடிவுகளை எடுத்து வருகிறது. அது போன்ற முடிவுகளை அரசும், நாடாளுமன்றமும்தான் எடுக்க வேண்டும்.

யாரெல்லாம் நாடாளுமன்றத்துக்குள் நுழையலாம் என்பதைக் கூட உச்ச நீதிமன்றம் முடிவு செய்கிறது. இதைத் தான் நீதிபதிகள் ஏற்படுத்திய சட்டம் என்று குறிப்பிடுகிறேன்.

மக்கள் தங்களின் வாக்குரிமையின் மூலம் ஒரு மோசமான வேட்பாளரை நிராகரித்துவிட்டால், அதை மக்களின் விருப்பம் அல்லது தீர்ப்பு என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உச்ச நிதீமன்றம் எவ்வாறு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.

உச்ச நீதிமன்றங்களில் 2-க்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு இப்போது விசாரணையை நடத்துவதில்லை. 2 நீதிபதிகள் மட்டும் அமர்ந்து தீர்ப்பு கூறுகின்றனர். அதில் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், எங்களால் (அரசால்) என்ன செய்ய முடியும்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்தலாமா என்பதை இரண்டு நீதிபதிகள் முடிவு செய்கின்றனர். மேலும், யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடலாம், போட்டியிடக்கூடாது என்பதையும் அவர்கள் முடிவு செய்கின்றனர்". இவ்வாறு குர்ஷித் கூறியிருந்தார்.

2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நிதீமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டித்தான் குர்ஷித் இவ்வாறு கூறியிருதார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x