Published : 10 Aug 2014 09:16 AM
Last Updated : 10 Aug 2014 09:16 AM
பிறந்ததிலிருந்தே வாய் பேச முடியாத தங்களது 18 வயது மகன், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததும் பேசியதாகக் கூறி லண்டன் வாழ் இந்திய குடும்பத் தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு சென்று அங்கேயே வசித்து (என்ஆர்ஐ) வருகின்றனர். இந்த தம்பதிக்கு சதீஷ் என்கிற மகன் பிறந்தார். ஆனால் பிறப்பிலிருந்தே அவரால் வாய் பேச முடியவில்லை. மகனுக்கு மூன்றரை வயதானபோது திருப்பதிக்கு வந்த இவர்கள், மகன் வாய் பேச அருள் புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.
இதனிடையே,லண்டனில் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றபோதும் சதீஷால் பேச முடியவில்லை. இவருக்கு தற்போது வயது 18. இந்நிலையில், சதீஷ் குடும்பத்தினர் சனிக்கிழமை திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தீர்த்தம் பெற்றுக்கொண்டு கோயி லுக்கு வெளியே வந்தனர்.
அப்போது சதீஷ், ‘அம்மா’ என்றும், ‘கோவிந்தா...கோவிந்தா’ என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி.கோபால் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
18 ஆண்டுகளாக பேசாமல் இருந்த தங்களது மகன் சதீஷ், ஏழுமலையான் அருளால் பேசி விட்டதாக பெற்றோர் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT